ஆத்தூர்: ஆத்தூரில் போலி ஆவணம் தயாரித்து தியேட்டர் மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜ மாவட்ட நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் அங்கமுத்து (60). அங்குள்ள திரையரங்கு ஒன்றில் மேலாளராக உள்ளார். இவர் நேற்று ஆத்தூர் போலீசில் அளித்த புகாரில், நேற்று முன்தினம் மதியம் தியேட்டரில் பணியில் இருந்தபோது செல்போனுக்கு அழைத்த சேலம் கிழக்கு மாவட்ட பாஜ நிர்வாகி அருள் பிரகாஷ், தியேட்டர் மற்றும் வளாகத்தில் உள்ள கடைகளுக்கு உரிமையாளர், தன்னை பவர் ஏஜென்டாக நியமித்திருப்பதாகவும், இனி தியேட்டர் மற்றும் கடைகளை தான் நிர்வகிக்க இருப்பதாகவும் கூறினார்.
இதற்கு உடன்படாவிட்டால் தீர்த்துக் கட்டி விடுவேன் என எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் மாலை 6 மணி அளவில் நேரில் வந்து, தான் வைத்திருந்த ஆவணங்களை காட்டி மிரட்டினார். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி இருந்தார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தியதில், போலி ஆவணம் தயாரித்து கூட்டு சதி செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் கிழக்கு மாவட்ட பாஜ அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு தலைவர் அருள் பிரகாஷ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த பெங்களூரைச் சேர்ந்த நரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகிய 3 பேர் மீது போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில், அருள் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சினிமா தியேட்டரை அபகரிக்க முயன்ற பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.